Thursday, March 10, 2011

தீண்டுமின்பம்

காடு கரைகளிலும்
கழனி வெளிகளிலும்
உலவும்
காற்று வந்து அவனைத் தீண்டுகிறதே.

பார்க்கும் இடத்திலெல்லாம்
அவன் படும்
பாடுகளையெல்லாம் பார்த்தவைகளின்
பற்று மிகுந்துருகும்
பார்வை வந்து தீண்டுகிறதே.

கேட்கும் ஒலியிலெல்லாம்
கேட்கிறதே
அவன் நலன் வினாவும் பெருங்கருணை
அவனைத் தீண்டி

தீண்டுமின்பம் துய்த்தவரோ
தீயினின்பம் துய்த்தவரோ
தீண்டாமை இயற்றியது?

விரலை, தீ சுட்டதுவோ
உதறி உதறித் தீராமல்
வாய் கொண்டு தீண்டி ஆற்றுகிறார்?

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP