Thursday, April 7, 2011

கடற்கரை

கடலோரம் வெளிக்கிருந்து
கால் கழுவி எழுந்தபின் தான்
கடலும் வானமும் தன் ஆகிருதி காட்டிற்று
மூச்சுவிட மறந்து என் மிதிவண்டியும்
அதை உற்றுப்பார்த்தபடி நின்றிருந்தது

இனி எங்கள் பயணம்
புதியதாய் இருக்கும்போல் உணர்ந்தோம்
அப்போது
பின்னிருந்து ஒரு குரல் கேட்டுத்
துணுக்குற்றுத் திரும்பிப் பார்த்தோம்;
வான் இடையில் கடல் குழந்தை
கைகள் அலைத்து விடைகொடுத்தது

அப்புறம் வந்து சேர்ந்தோம்
வால் நக்ஷத்ரம் ஒன்றால் அழைத்து வரப்பட்ட
சக்கரவர்த்திகள் போல்;
காதலரும் குழந்தைகளும்
காற்றில் வாழும் இன்னொரு கரைக்கு

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP