Thursday, April 21, 2011

எத்தனை அழுக்கான இவ்வுலகின்...

கொட்டகை நோக்கிச் செல்லும்
காலி குப்பை வண்டியின் உள்ளே
ஆறஅமர கால்மடித்து அமர்ந்து
வெற்றிலை போட்டுக்கொண்டு
வண்டியசைவுக்கு அசையும்
தன் ஒத்திசைவையும் அனுபவித்தபடி
ஆடி அசைந்து ஓர் அழகான தேவதைபோல்
சென்றுகொண்டிருக்கும் பெண்ணே,

முகஞ் சுளிக்கும் புத்தாடைகளுடன்
அலுவலகம் செல்லும் வேகத்தினால்
பரபரப்பாகிவிட்ட நகரச் சாலை நடுவே...
பணிநேரம் முடிந்த ஓய்வமைதியோ,
மாடு கற்பித்த ஆசுவாசமோ, இல்லை,
அபூர்வமாய் ஒளிரும் பேரமைதியேதானோ...

எத்தனை அழுக்கான இவ்வுலகின் நடுவிலும்
நீ ஒரு மூலையைத் தேர்ந்தெடுத்துக்கொண்டு
வாழ்ந்தே விடுவது கண்டு
இன்பத்தாலோ துன்பத்தாலோ துடிக்கிறதேயம்மா
என் இதயம்

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP