Friday, April 22, 2011

நீயும் நானும்

ஒரு தேநீர்க் குவளையை
நீ கொண்டுவரும் பக்குவம் கண்டு
பெருவியப்பும் பேரானந்தமும் கொள்கிறது
இந்த வையகம்
நான் பருகுகிறேன்
எனது மொத்த வாழ்வும்
இப் பிரபஞ்ச முழுமையின் சாரமுமே
அதுவேதான் என்றுணர்ந்துவிட்டவனாய்

நிறைவெறுமையும் அலுங்காத
அதீத கவனத்துடன் அவ்வெற்றுக் குவளையை
நீ எடுத்துக்கொண்டு செல்லும் பாங்கு கண்டு
அரிதான அவ்வெறுமைதான் காதல் என்பதைக் கண்டு
நீ தான் அக் குவளையில்
மீண்டும் மீண்டும் பெய்யப்படும் என் நிறைவு
என்பதையும் கண்டு
நான் வெறுமையாகி நிற்கிறேன்

நான் உன் மடியிலிருக்கையில்
ஒரு கவலையுமில்லை எனக்கு
நீ என் மடியிலிருக்கையிலோ
என் நெஞ்சு வெடித்துவிடும் போன்ற
என் கவலைகளின் பாரத்தை என்னென்பேன்!

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP