Monday, April 25, 2011

தாழிட்ட கதவின் முன்

1
தாழிட்ட கதவின்முன் நிற்கும்
மனிதனிடம் ஓடிவந்து
“இந்தாங்க மாமா“ எனத்
தன் பிஞ்சுக் குரலுடன் நீட்டுகிறது
அண்டை வீட்டுக் குழந்தை
அனைத்துப் பிணிகளுக்குமான மாமருந்தை
விடுதலையின் பாதை சுட்டும் பேரொளியை
சொர்க்கத்தின் திறவுகோலை!

2
தாழிட்ட கதவின்முன்
பொருமி நிற்பதன்றி
களங்கமின்மை பற்றி
நாம் அறிந்துள்ளோமா?
அறிந்துள்ளோம் எனில்
களங்கங்கள் பற்றியும்
நாம் அறிவோமில்லையா?
அறிவோமெனில்
அவற்றை ஏன் இன்னும்
ஒழிக்காமற் பேணிக்கொண்டிருக்கிறோம்?
சாதி மதம் நாடு இனம் என்று
நம்மைக் களங்கப்படுத்தும் பிசாசுகளின்
இருப்பிடமும் பாதைகளுமாய் நாம் ஆனதெப்படி?
களங்கமின்மையின் இரகசியத்தை
நாம் ஏன் இன்னும் காண மறுக்கிறோம்?

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP