Tuesday, April 26, 2011

எருது

அமர்ந்து அசைபோடும்
மரநிழலையும் மறந்து
வானமும் பூமியுமாய் விரிந்த
நிலக் காட்சியில் ஒன்றிவிட்டனை!

ஏது தீண்டிய அரவம்
உன் தோள்பட்டைச் சதையில்
திடீரென்று ஏற்பட்ட சிலிர்ப்பு?

நொய்மைக்குள் நுழைந்துவிடும்
அந்த வலுமைதான் யாதோ?

சொல்,
மெய்மையை அறிந்துகொண்டதனால்தானோ
ஊமையானாய்?

எங்களை மன்னித்துவிடு,
எங்கள் மொழியில்
உன்னை ஒரு வசைச் சொல்லாய் மட்டுமே
வைத்திருந்ததற்காக

இன்று பார்க்கத் தொடங்கிவிட்டோம் நாங்கள்,
கால்மடக்கி அமர்ந்திருக்கும் உன்பாறைமையை,
காட்டில்
சிங்கத்தினை எதிர்க்கும் உன் உயிர்மையினை
உன் நடையும் நிதானமும் வாலசைவும்
பறைபோல ஒலிக்கும் உன் குரலும்
அமைதியாக எமக்குப் போதித்துக் கொண்டிருக்கிறதை

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP