Wednesday, April 13, 2011

வண்ணத்துப்பூச்சி

அன்று மண்ணின் நிறம் என்னை உருக்கிற்று
வீழ்ந்த உடம்புகள் கழன்று உறைந்த ரத்தங்கள்
இன்னும் மறக்கமுடியாத கொடூரங்களின் எச்சங்கள்
அனைத்தும் மன்னிக்கப்பட்டுவிட்டதா இம்மண்ணில் ?

மண்ணின் வளமும் பெருமையும் மின்ன
மேலெழும்பி பிரகாசித்து நின்றன பூக்கள்
எத்தனை வண்ணங்களில் !

ஆனால்
தேன் தேன் தேன் என பரவச பதைப்புடன்
சிறகுகள் பரபரக்க
அங்கே ஒரு வண்னத்துப் பூச்சி வந்தபோது
என்னை அறுத்தது அழகா அருவருப்பா
எனப் பிரித்தறியமுடியா ஓர் உணர்ச்சி

உறிஞ்சும் வேகத்தில்
கைகூப்பி இறைஞ்சுவதுபோல
மேல்நோக்கி குவிந்த சிறகுகள் நீங்கலான
உடல் முழுக்க விர்ரென்று
நிரம்பிக் கொண்டிருந்தது தேன்

சிறகுகளின் மெலிதானதுடிப்பில்
ஆழமானதோர் நடுக்கம்
எந்தமொரு வைராக்கியத்தை
மூச்சை பிடித்துகாக்கிறது அது ?
அதேவேளை அதே வேகத்துடனும் துடிப்புடனும்
கீழ்நோக்கி சுருண்டு உன்னியது
கரு தாங்கும் அதன் கீழ்பகுதி

தேன் நிரம்பி கனத்து
பூமி நோக்கி தள்ளும்
சின்னஞ்சிறு பாரத்தை
வெகு எளிதாக
தேன்தொடா சிறகுகள் தூக்கிச் செல்கின்றன
மரணமற்ற ஆனந்த பெருவெளியில்!

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP