Sunday, April 10, 2011

உருமாற்றம்

அந்த அறையில் மூவர் குடியிருந்தனர்

காட்சி -1

சாந்தியும் சந்துஷ்டியும் காட்டும் புன்னகையுடன்
தியானத்தில் அமர்ந்திருந்தார் புத்தர்
முழுநிர்வாணத்தை நோக்கி
அரை நிர்வாணத்துடன்
ராட்டை சுற்றிக் கொண்டிருந்தார் காந்தி
ரத்தம் சொட்ட தன்னைத்தானே
சிலுவையில் அறைந்து கொண்டிருந்தான்
மரிக்கவும் உயிர்த்தெழவும் அறிந்த மேதை

வெளியே இருந்து ஓர் ஓலக்குரல்
உள்ளே புகுந்தது
அரைக்கணம் தாமதித்திருக்குமா ?
புகுந்த வேகத்தில் வெளியே ஓடிற்று
ஆனால் அந்த அரைக்கணத்தில்
அக்குரல் உருமாறியிருந்தது
சாந்தியும் துக்கமும் நிறைந்த ஒரு குரலாய்

காட்சி 2

நான் உள்ளே புகுந்தபோது
ஒரு காபி கிடையாதா என்றார் புத்தர்
தனது இதயத்தை ஒரு யாசகக் குவளையாய்
குலுக்கினார் யேசு
பட்டினிக்குழந்தைகளுடன்
கைவிடப்பட்ட பெண்ணின்
சீரழிந்த புன்னகையைப்போல
ஒரு புன்னகையை வீசிவிட்டு
ராட்டை சுற்றினார் காந்தி

அதீத துக்கத்தால் என் இதயம் வலித்து எழுந்த குரல்
வேகமாய் குதித்தது ஜன்னல் வழியே வெளியே
வெளியே குதித்த குரல் வீதியெல்லாம் அலைந்து
நாற்றமடிக்கும் ஓர் அவலக்குரலாய் மாறியது

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP