Saturday, April 16, 2011

இறையியல்

'ஆண்டவர் முதலில் ஆதாமையும்
அப்புறம் அவனுக்கு துணையாக ஏவாளையும்.. '
என்பது ஓர் ஆணாதிக்கப்பொய்
ஆண்கடவுள் ஆதாமையும்
பெண்கடவுள் ஏவாளையும் படைத்தனர்

தத்தமது ஏகாந்தநிலை சலிப்புற்று
ஆதாமும் ஏவாளும் காதலிக்கத் தொடங்கிய
மண்ணின் அழகுகண்டு உண்டான தாபம் உந்த
ஆண்கடவுளும் பெண்கடவுளும் காதலிக்கத்தொடங்கினர்

கடவுளர்கள் ஒரு குழந்தையை கருவுறுவதற்கு முன்
ஓராயிரம் கோடி மக்களை பெற்றிவிட்டனர் ஆதி தம்பதியினர்

துன்பச் சூழலில் இருந்து விடுபட ஆதாமும் ஏவாளும்
தத்தமது கடவுளை நோக்கி திரும்பியபோது
ஆட்சிபீடத்தை சாத்தானுக்கு விட்டுவிட்ட
கடவுள் தம்பதியினர்
கலவியிலிருந்தே இன்னும் விடுபடவில்லை

மீட்சிக்கு இனி எங்கேபோவது ?ஆதாமும் ஏவாளும்
தங்கள் காதலுக்கு முன்னாலுள்ள ஏகாந்த
வானிலிருக்க கூடும் தங்கள் கடவுளர்களின்
சொற்களை தேடிக் கொண்டிருந்தனர்.

வானத்திலிருந்து சொற்கள்
பறவைகளை ஏந்திக் கொண்டதை கண்டனர்
மேகங்களை உருவாக்கி
மழையை பொழிந்ததைக் கண்டனர்
உயிர்காக்கும் உணவாகி தங்கள் இரத்தத்தில்
காலங்காலமாய் துடித்துக் கொண்டிருப்பதையும்
இன்னும்.... அவர்கள் முடிவற்றுப் பார்த்துக் கொண்டிருந்தனர்
வானத்துச் சொற்களின் முடிவற்ற வேலைகளை

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP