Thursday, April 7, 2011

பக்த கோடிகள்

பக்த கோடிகள் புடைசூழ
கால்மேல் கால்போட்டு
கடவுள் நான் என்று
டிக் டிக்கிறது
முக்காலிமேல் ஒரு கடிகாரம்

பக்தகோடிகளுக்கு
ஓவர் டைமும் உபரிவருமானமும்
உயர்குடி வாழ்வும்
அருளுகிறார் கடவுள்

கடவுள் மரிப்பதில்லை
ரிப்பேர்தான் ஆவதுண்டு என்கிறது வேதம்
கடவுள் பழுதானால்
காலநோய்கள் பெருத்துவிடுமாகையால்
கடவுள் பழுது நீங்க
நிரந்தர மடங்களும் ம்டாதிபதிகளும்
அவ்வபோது தோன்றும் மகான்களும்
காலநோய் தீர்க்க கல்விமான்களும்
சதா கடவுள் நாமம் மறவாது பாடிக்கொண்டிருக்க
பக்த கோடி மகாஜனங்களும் உண்டே

இந்தக் கூட்டத்தில் போய்
கவிஞனை தேடுவதென்ன மடமை
அதோபார் உழைத்து ஓடாகி
மரணம் பார்த்து நின்றுகொண்டிருக்கும்
ஒரு மாட்டின்மேல்
மெளன அஞ்சலி செய்துகொண்டிருக்கிறது
ஒரு காகம்
நித்யத்துவத்தை நோக்கி அதன் முகம்

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP