Thursday, May 19, 2011

கொடுவனம்

தன்னந்தனியே
ஒரு காட்டிடையே
நிற்க நேர்ந்துவிட்டதா என்ன?
நன்பகல் வேளையிலும்
இரவின் ஒலியுடன்
இருண்டு கிடப்பதேன் இவ்வுலகம்?
உயிரைப் பிடித்துக்கொண்டு
பதுங்கி வாழ் முயல்களுக்குமப்பால்
நிலவவே முடியாது
மடிந்தும் தோன்றாமலுமே போன,
யாரும் கண்டிராத
மென்னுயிரினங்களின்
மரண வாசனையோ
மரண பயமோ, இப்போது உன்
இதயத்தைப் பிசைந்துகொண்டிருப்பது?
கண்டுகொண்டனையோ,
இம்மரணத்தின் சன்னிதியில்
முற்றிலுமாய் அழித்தொழிக்கப்பட வேண்டிய
கொடுவனத்தை?
அழிக்கப்படுமுன்
இவ்வேதனையிலேயே
விரைவாய் உன் மரணமும்
நிகழ்ந்துவிடுமென்றா
அவசர அவசரமாய் அதை எழுதி
மரணத்தை வென்றுவிடப் பார்க்கிறாய்?

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP