Thursday, May 26, 2011

புதிய பேருந்து நிலையம்

ஒளியும் காற்றும்
வெள்ளமாய்ப் பொங்கிநிற்கும்
பேருந்து நிலையம் வந்து நின்றார்
புத்தர்.

வெளியினின்றும் வெளியினைப் பிரிக்கும்
பக்கச் சுவர்களில்லாத
தியான மண்டபம்
சுரணையை மழுங்கடிக்காததும்
போர் வித்துக்களை விதைக்காததும்
வாழ்வைக் கொள்ளையடிக்காததும்
வாழ்வை விட்டுத் தள்ளிநின்று
வாழ்வைக் கொன்றழிக்காததுமான
கோயில்.

‘வானமும் பூமியும்’ எனும் சிற்பம்
பிரக்ஞையை அழிக்காததும்
சொற்களால் மெய்மையைச்
சிதறடிக்காததும்
வெறும் பொழுதுபோக்காகி விடாததுமான
உன்னதக் கலைக் கட்டடம்.

பிரக்ஞையற்றும் சுரணையற்றும்
வந்தும் நின்றும் போயும்
கொண்டிருக்கும் மனிதர்கள்
நீங்காது நிற்கும் துயரங்கள்.

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP