Wednesday, June 1, 2011

கவிதைவெளி

கவிதை எழுப்பித்தானே
காலையில் நான் துயில் களைந்தேன்
கவிதையின் நீரில் தானே
முகம் கழுவினேன்

கவிதையின் தூரிகை கொண்டல்லவா
வீட்டினை நான் தூய்மையும் ஒழுங்கும் செய்தேன்
கவிதையின் படகிலேறியன்றோ
அண்டை வீட்டார்களுடனும் அந்நியர்களுடனும்
உறவு கொண்டேன்

கவிதையின் நெருப்பினிலன்றோ
சோறு வடித்தேன்
கவிதையின் அரிவாள்மனை அமர்ந்தல்லவா
காய்கறிகள் நறுக்கினேன்
கவிதையின் வாகனத்திலேறித்தானே
அலுவலகம் சென்றேன்

கவிதையின் கிண்ணத்திலன்றோ
தேநீர் பருகினேன்
கவிதையின் ஒளியிலல்லவா
தகதகத்துக் கொண்டிருந்தது இயற்கை
கவிதையின் பொன்வெளியிலல்லவா
நாளும் என் சிறுஉலா நடந்தது

கவிதையின் மொட்டைமாடியிலன்றோ
வான் பார்த்து நின்றேன் நான்
கவிதையின் நாற்காலிகளிலமர்ந்து கொண்டல்லவா
பிரச்னைகளை நாங்கள் ஆராய்ந்தோம்
மூடத்துயர் மிகுந்துகொண்டே வரும் இவ்வுலகில்
மனித முயற்சிகளனைத்தும் வீணேயாகிக் கொண்டிருக்கும்
இச்சாம்பல் வானத்தின் கீழே
வாழ்வின் அரும்பொருள் வினை இதுவே என
எப்போதும் உணர்த்தும் நிலையில்தானே
எரிந்துகொண்டிருந்தது அங்கே
கவிதைவெளி!

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP