Wednesday, June 8, 2011

இராஜ்ய பாரம்

மைதாஸ் நீ தொடுவதற்குமுன்
எல்லாம் பொன்னாகத்தானே இருக்கின்றன,
வேறு ஒரு வரம் கேள்.

பேசத் தோன்றாமல் நின்றதனால்
அவளாகவே உதவினாள்;
நீ தொடுவதெதுவுமே
தன் இயல்பினின்றும் நலிந்து விடாதவாறு
வரம் தருகிறேன் என்றாள்.

அன்று முதல் மைதாஸ்
தன் ராஜ்யத்திலுள்ள
அனைத்துக் குழந்தைகளையும்;
குழந்தையுள்ளம் கொள்ளும்
நேரம் பார்த்து
அந்தந்த மனிதர்களையும்
போய் தவறாது தொட்டுவிடும்
வேலை மும்முரத்திலாழ்ந்தான்.

மக்களும் மந்திரி பிரதானிகளும்
மன்னரின் சித்தம் குறித்தும்
நாட்டைக் குறித்தும்
கவலை கொண்டு கூடினர்

இராஜ்ய பாரம் என்பது லேசா?

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP