Thursday, June 16, 2011

மணமக்கள்

நன்கு அலங்கரிக்கப்பட்ட
ஒரு திருமண மண்டபம்.
மய்யமாய்
மலர்மாலை சூடிநிற்கும்
தன்னந்தனியான
ஒரு திருமண ஜோடி.
ஆனால், தனிமை என்பது
ஆங்கில்லை.

பாட்டுகள் கொண்டாட்டங்கள்
கோலாகலங்கள்
ஒலிபெருக்கியில் உரத்து ஒலித்து
கும்மாளப் பாட்டுக்கு
இளைஞர்கள் ஆடிய ஆட்டங்கள்
பரிசளிப்புகள் பரிமாற்றங்கள்
விராரிப்புகள் விருந்துகள்
அனைத்தும் அக்காட்சியில்
திடீர் விழிப்பெய்தினவாய்
தங்கள் குணங்களை
ஒதுக்கி நின்றன ஒரு கணம்.

மண்டபத்தில் நுழைந்த ஒரு மூதாட்டி
கண்பனிக்கக் கைகூப்பித் தொழுது நின்றாள்
மணமக்களை நோக்கி.

மணமக்கள் விழிகளிலும் ஒரு திகைப்பு.
தங்கள் முதல் சந்திப்பில்
சமப்பார்வையாக இருந்தது,
தங்கள் களவொழுக்கத்தில்
ஆர்வத்தாலும் சந்திப்பில்
கைவிலகி நின்று தகித்தது,
தங்கள் காதல் வாழ்வின்
ஒவ்வொரு வேளையிலும்
இனித்தும் கரித்தும் நின்றது,
இன்று ஒரு உரத்த குரல் எய்தி
கூட்டம் கூட்டி
மலர்மாலைகளுடன் காட்சியளிப்பது-
எல்லாம்
ஒரு மூதாட்டியால் மட்டுமே
உள்ளம் கசிந்துருக
உய்த்துணர இயலும் தேவமோ?

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP