Friday, June 17, 2011

நாய்ச் சிற்பம்

வளர்ப்பு மிருகங்கள் வளர்ப்பதில்
பிரியமில்லாதவனாய் இருந்தவன்,
என் சின்னமகனின்
பிடிவாதமான கட்டளையால்
மாட்டிக் கொண்டேன்,
ஒரு செல்ல நாய்க்குட்டியுடன்.

உணவளித்தோம், கொஞ்சினோம்;
குளிப்பாட்டினோம்;மெய்தழுவி மகிழ்ந்தோம்.
விளையாடினோம்;
காலை நடை மாலை நடை சென்றோம்.
கவிதை எழுதுகையில் நூல் வாசிக்கையில்
நாற்காலியொட்டி படுத்துக் கொள்ளும்
அதன் இருப்பினை வருடி நின்றோம்.
வீட்டைவிட்டு வெளிச் செல்கையிலும்
உள்வருகையிலும் இன்முகத்துடன்
உறவு பேணிக் கொண்டோம்.

எங்கள் வாழ்க்கையை விட்டொரு நாள்
எங்கள் செல்லநாய் மறைந்து போனது.

எங்கள் தோட்டத்தில் ஓர்நாள் கிடைத்த
ஒரு பெரிய மர வேர்த்துண்டின்
அழகை வியந்து அதைச் சற்றே செதுக்கி
தோட்டத்து நடுவே அமைந்த ஓர் மேடையில்
அந்த அழகு நாய்ச் சிற்பத்தை நிறுத்தினேன்.

அதை ஏறெடுத்தும் பார்த்தானில்லையே என் மகன்!

கலையானது ஒருக்காலும் கடவுளாவதில்லையோ?

தன் நாய்ச் செல்லத்தை இழந்த துயரம்
அதன் சிற்ப அழகில் தீரவில்லை என் மகனிடம்,
ஆனால் அவன் மீண்டும் மலரத் தொடங்கினானே
வாழ்வின் தீராத உறவில்!

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP