Saturday, June 18, 2011

இரத்தினங்கள்

கணமும் விண்ணைப் பிரிந்திராத காதலால்
பெருநிறைவும் பேரழுகுமாய்
ஒளிர்ந்து கொண்டிருந்தது பூமி.

சாலைவழிச் செல்லும் சக்கரங்களின்
புழுதி தீண்டாத தூரத்தில்
அவன் ஒரு வீடமைத்தான்.

அதை அவன்தன் இனியாள் ஒருத்தியிடம்
ஒப்படைத்ததுபோல்
அதிகாலையிலேயே எழுந்து
அவள் தந்த கட்டுச்சோறுடன்
வெளியே கிளம்பினான்.

இவ்வீடு விஷயமாய்
இப் பூமியிடம்
மிகப்பெரிய வில்லங்கத்தில் மாட்டிக்கொண்டு
ஒருவாறு நல்லவிதமான
பேச்சுவார்த்தை நோக்கி
நாளும் தூங்கி விழித்துச்
சென்றுகொண்டிருப்பான் போலிருந்தான்-
அவளும் அக்கவலையை அவனோடு பகிர்ந்துகொள்ளும்
ஒரு பாதியாகியிருந்தாள்.

அவர்கள் பொறுமையாக இருந்தார்கள்.
நன்மையின் மீதான
ஆழ்ந்த உறுதியோடும் தெளிவோடும்
இருந்தார்கள்.
எதிராளியின் வல்லமையையும் கருணையையும்
நன்குணர்ந்த அறிவாலும் தாழ்மையாலும்
அமைதி கொண்டிருந்தார்கள் அவர்கள்.
கிடைத்தற்கரிய அற்புத இரத்தினங்களைப் போல்
ஒளி வீசின அவர்கள் கண்கள்.

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP