Sunday, June 19, 2011

அந்தி

நீரால் அமைந்த இவ்வுலகில்
வானிற் கதிரவனாய் ஒளிர்வதும்
மண்ணிற் தாமரைகளாய் மலர்வதும்
ஒன்றேயெனும்
பேருணர்வின் நாடகமோ இவ்வாழ்க்கை?
இரு பேருணர்வுகளின் சந்திப்போ காதல் என்பது?

ஒருவரையொருவர் ஈர்த்து
இருவரையும் இல்லாமலாக்கும்
காட்சியின்பம் மட்டுமேதானோ அது?

ஒருவரை ஒருவர் அடித்துப் புசித்து
எவரும் இல்லாமலாகும்
பெருங் காமப் பசியோ?

யாருமறியாவண்ணம்
எங்கு எப்போது சந்திப்பதென
அவன் தன் குறிப்புணர்ந்தவளோ
தன் கைத்தாமரை குவித்து
அந்திக் குளக்கரையைக் கூறிநின்றாள்?

எல்லோரும் அகன்று
தனித்துவிடப்பட்ட அந்திமங்கல்
அமைதிக் குளக்கரை
மரநிழலில் ஒளிந்தபடி
அவன் அவளைச் சந்திக்க்க் காத்திருந்தான்.

பரிதியைக்
கண்டு விரிந்த தாமரையே
பரிதியை
உட்கொண்டு குவிந்துநின்றிருந்தது அங்கே.
வெளிமூச்சு போலும்
வீசிய சிறுமென் காற்றில்
ஒன்றையொன்று நெருங்கித்
தொட்டுணர்ந்து விலகிக்கொண்டன
இரண்டு மொட்டுகள்.

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP