Monday, June 20, 2011

சின்னஞ்சிறு குருவியே

எத்துணை கொடுத்து வைத்தவள் நீ!
மானுடப் பரப்பில்
உன் மூளை இயங்கிக் கொண்டிருக்கவில்லை.
அமைதி அமைதியின்மை அறியாத
பேரமைதியின் புதல்வி நீ.
எளிய தேவைகளுக்கும்கூட
தன் வாணாளைப் பணயம் வைத்துப்
பாடுபட வேண்டிய
விந்தை உலகத்தவனில்லை நீ.
உன் உயிர் தரிப்பதற்கான
சிற்றுணவுப் பஞ்சத்தை
நீ ஒரு நாளும் அறிந்த்தில்லை.

புகழுக்கும் மேலாண்மைக்கும் போகத்திற்குமாய்
அல்லலுறும் மானுட உலகையே அறியாது,
வானத்திற்கும் பூமிக்கும் பிறந்தவளாய்
அன்பின் பெருவிரிவில் சிறகுவீசும் என் செல்லம்!

இன்பமும் துன்பமும் உயிரச்சமும்
அறியாதவன்
என்றாலும் இயற்கைப் பெருவெளியை
உதைக்கும் ஒரு சிறு கீறலுக்கும்
துணுக்குற்று அலறும் ஒரு நுண்ணுயிர்!
உனக்காக,
உனக்காகவேதான் என் கண்ணே,
இந்த ஈனச் சிறு மானுடர்க்காய் அல்ல;
அவர்களுக்காகவெனில்
இவ்வுலகை ஆயிரம்முறை அழிக்கலாம்.
உன் துணுக்குறலாற் துயருற்றே
உனக்காகவேதான் என் செல்லமே
தன்னைச் சரிசெய்துகொள்ளத் துடிக்கிறது
இப் பேரியற்கை
என் அன்பே!

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP