Tuesday, June 21, 2011

பெருங்குளம்

துடிக்கும் அலைகளுடன்
வானம் பார்க்க விரிந்து
பூமி செழிக்க்க் கிடக்கும்
நீயே உனது ஆனந்தம்.

கண்களிற் பட விழைந்த
காட்டுப் பூக்கள் கோடியின்
காதல் உளக் கிடக்கையோ,
பால்வெளியோ,
மண்ணில் இறங்கி நிற்கும்
தேவதைகளோ என
ஒளியில் விழித்துக் காற்றொடு கூடிப்
பேரானந்தம் கொண்டாடுகின்றன
உன் பக்கத் துணைகளாம் நாணல் மலர்கள்
முடிவற்றதோர் இன்பக் காட்சியாய்.

குளிர்காற்றும், திடீரென்று
வான் முழுக்க நிறைந்துவிட்ட
மழைமேகங்களும் இடி முழக்கமுமாய்
நெருங்கிவிட்டதோர் முற்றுமுழுநிறைவேற்றம்
உன் முகப் பொலிவைக் கூட்ட
மரங்கள் அசைகின்றன
தோகை விரித்தாடும் மயில்கள் ஆயரமாய்.

ஆட்டுமந்தை ஓட்டிவரும் மேய்ப்பனின்
வாடி வதங்கிய முகத்திலும்
பூ மலர்கிறது.

உன் கரையோர ஆலமரத்தடியிலன்றோ
எங்களை ஒதுங்கி நிற்கவைத்தது மழை.
மழையை வாங்கி
மழையேயாகி நிற்கும்
உன் கோலம் காணவோ
வந்துற்றோம் நாங்கள் இங்கே?

உன்னைக் காணும் பித்தேறி
சுற்று வட்டாரம் முழுக்க நீ விரித்திருக்கும்
பச்சைக் கம்பளம் மீதூர்ந்து
நாங்கள் பறந்தோடி வந்து நிற்பது
நீ எங்களைத் தேர்ந்துள்ள இரகசியத்தாலோ?
எதற்கோ?

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP