Friday, June 24, 2011

அமைதி என்பது...

உத்தேசமில்லாமலேயே
அனைத்துச் சச்சரவுகளுக்கும்
தீவினைகளுக்கும் எதிராய் எரியும்
உக்கிரமான போரோ?

பயனிலா வெளிப்பாடுகளனைத்தையும்
இடையறாது களைந்தபடி
உள்ளோடும் அழுக்குகளனைத்தையும்
இமைக்காது உற்றுநோக்கியபடி
ஆழ்ந்து அமர்ந்து நிற்கும்
அடங்கலரிய கொந்தளிப்போ?

எச் செயலாய் வெளிப்படுவதென
உட் திணறி
கூருணர்வாய்
அவதானித்தலாய்
அறியாமை கண்டு
வேதனிக்கும் நெஞ்சாய்
சாய்வு சமரசமற்ற
பேரறிவாய்
கருணையாய்
மெய்யன்பாய்
மெல்லக் கசிந்துருகும்
பேராற்றலின் சுனையோ?

கேளிக்கை
விளையாட்டு
வேடிக்கை
திருவிழாக்கள்
எதனாலும்
அணையாது நின்றெரியும் நெருப்போ?

தோல்வியின்
ஆகப் பெரிய தனிமையினால்
ஆகிய பெருங் கண்ணீருடன்
கனலும் துர்ப்பாக்கியமோ?

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP