Monday, June 27, 2011

துயில்

கண்டு கொள்ளும்போது முகிழ்க்கும்
மெல்லிய இதழ் விரிவில்லை?
காணாதபோது துலங்கும்
மவுனமும் இல்லை?
தேடாத போது ஒளிரும்
அமைதியுமில்லை.
உறும் கவனநெருப்புமில்லை
துயரின் வலிகளேதுமில்லை என்பதுவே
கூடுதல் நிறைவு.

விழிகள் மூடியிருக்கின்றன
கனவுகள் இல்லையென்று
அறுதியிட்டுச் சொல்கின்றன
முகத்திலோடும் ரேகைகள்.
மூச்சு இருக்கிறதுவால்
மரணமில்லை என்று சொல்வதற்கில்லை.

யாருக்காவது கலைக்க மனம்வருமோ
இந்தத் துயிற்கோலத்தை?

இன்னும் கொஞ்சம் ஓய்வு கொள்ளட்டுமென்று
தனக்கு மட்டுமே கேட்கும் குரலில் முனங்கிக்கொள்கிறது
மரணமேயில்லாத ஓர் தாயுள்ளம்.

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP