தன் உயிர்க்கே ஆதாரம்போல்
தன் உயிர்க்கே ஆதாரம்போல்
எதையாவது பற்றிக் கொண்டிருக்காத
மனிதனே இல்லையோ இப் பூமியில்?
தனது ஊன்றுகோல்களே
கொலைக் கருவிகளாய் மாறும்
இரசவாதம் அறியாத
மூடமும் வல்லாண்மையும்தான் மனிதனா?
தருணம் ஒவ்வொன்றிலும்
தன் மாண்பினை வெளிப்படுத்தும்
ஆதாரமற்ற வெளியின்
அமைதியும் தனிமையும் எங்கே?
தனது பற்றுப் புள்ளியை மய்யமாக்கியே
தனது நா அலமாரியில்
வரிசை கொண்டிருக்கும் ஓராயிரம்
நூலறிஞர்களின் கட்டுரைகளால்
என்றாவது நிலைநிறுத்தப்பட்டிருக்கிறதா
அமைதி, இப்பூமியில்?
துயர்வலி மட்டுமேதானோ
என் தேன்சிட்டே
உயிர்வாழ்வின் ஆனந்தம் அறிந்த
மனிதனின் பிரக்ஞை?