குருதி நிறமான ஏரி
அந்திச் சூரியனின் இரத்தச் சிவப்பில்
ஏரியெங்கும் கனன்ற மனத் தளர்ச்சியின்
சொல்லொணாத் துயர்.
காணும் பொருள்கள் யாவுமே
வாயும் வார்த்தைகளுமற்றதுகளாய்
அன்றைய பகல் முழுதுமே
துயரத்தின் கனலானது ஏன்?
வானம்தன் முடிவின்மையில்
விண்மீன்கள் தத்தம் தனிமையில்
மலைகள் தம் அசைவின்மையில்
மனிதனும் தன் ஆளுமையில்
எங்கும் நிலை கொண்டுள்ளது
துயரமே தானோ?
நீரைக் கிள்ளி உசுப்பி எழுப்பி
யாவும் இன்பத்தில் நனைந்து சிலிர்க்க
அள்ளி வீசிப்
பாடி ஆடிவரும் தேவதைகள்
எங்கு மறைந்து போனார்கள் இப்பூமியில்?
ஒரு பேருவகைக்காய்
தொடங்கியிருக்கின்றனவோ,
மலர்கள் கனிகள் தாவரங்களெங்கும்
ஒளியும் மணமும் வண்ணங்களும்?
ஆறாத் துயருக்கும் போருக்கும்
அமைதியின்மைக்குமாய்த்
தொடங்கியிருக்கின்றனவோ,
வியர்வை நாறும் கட்டடங்களெங்கும்
பழியும் பாவமும் மூடத்தனங்களும்?
சிவந்து இருண்டுநிற்கும் நீர் நடுவே
கருப்பும் வெள்ளையுமாய் நீந்தும் சில பறவைகள்.