தோல்விகளால்
(தோல்விகளாற் சற்றும் துவழாது
காலங் காலமாய்க்
கவிகளும் புத்தர்களும்
தோன்றிச் தோன்றிச்
சுட்டிக் கொண்டேயிருந்தும்)
கூடிவரவில்லையே இன்னும்
சொல்லொணாத் துயரங்களின்றும்
விடுதலை!
பூர்வகுடி இனக்குழுவிலிருந்து இன்றுவரை
மனிதன் சுமந்துகொண்டுவரும்
சுமையெதுவும் அழுந்திப்
பொசுக்காமையினாலன்றோ
பூத்துள்ளது இத்துணை
மென்மையும் அழகும் இனிமையும்,
அண்டசராசரங்களையும் அணைத்து
விரியும் காதலும் கொண்ட
ஒரு கன்னிப் பெண்ணின் இதயம்!
மானுட விஷங்களைத் தன்
கண்டுகொள்ளாமையினாலும்
நிர்த்தாட்சண்யத்தாலும்
தூய்மையாலுமே
கொன்றொழித்துவிட்ட
பேரற்புதத்தை, இரகசியத்தை
அவள் கண்ணின் மின்னொளியில்
கண்டதில்லையோ மானுடர்கள்?