Thursday, July 21, 2011

மரக்கிளையில்

மரக்கிளையில் துயிலும் மனிதனைப் போலின்றி
எல்லாப் பிடிகளையும் விட்டுவிட்டு
முழுமையாய் என்னை ஒப்படைத்தபடி
துயிலுக்குள் நுழைகிறேன்.
அதனை அங்கே சந்திப்பேன்
என்பதற்கான சூசகமான அகவெளியை
அப்போதே அடைந்தவனாகிறேன். ஆனால்
வேட்டையாடப்பட்ட இரையைத்
தன் இடம் இழுத்துச் செல்லும் மிருகம் போல்
தூக்கம் என்னைக் கொண்டுபோய்விடுகிறது.
விடியலில் நான் காணாத விடியல்
ஏமாற்றத்துடன் திரும்பிப் போகிறது
என் தூக்க போதையில் தெரிகிறது
இரவு தோறும் என் உறக்கத்தின் ஆழத்துள் புகுந்து
அது என்னைத் தேடுகிறது.
இரவில் நான் திடுக்கிட்டு
எழுந்து உட்கார்ந்தபோது
அது அங்கே இருந்ததைப் பார்க்கிறேன்

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP