Friday, July 22, 2011

பிச்சு

என் நேசத்திற்குரிய வீட்டிற்கு
ஒரு வருகை அளிக்கவே விரும்பினேன்

அங்கே, துள்ளி மணம் வீசிக்கொண்டிருக்கும்
குழந்தை மலர்களுக்கு
கொஞ்சம் இனிப்புகளோ பொம்மைகளோ
பெரியவர்களுக்கு
வளம் கூட்டும்படியான பொருள்களோ
ஆதரவு வார்த்தைகளோ-
அளிப்பதற்கு ஏதுமில்லாத
ஒரு நிலையும்தான் வந்ததே இன்று
எனக் குழம்பி நிற்கிறேன்

கொடுப்பதற்கு ஏதுமில்லாதது மட்டுமின்றி
பெறுவதற்கே நிற்குமொரு
பிட்சா பாத்திரமேயா நான்?

எனினும் சிறுபசி ஏதுமில்லா இவ்வேளை
அவ்வீட்டினைக் கண்ணுற்றபடியே
கடந்து செல்லவே விரும்புகிறேன்

நான் தாண்டிச் செல்லச் செல்ல
தாண்டிச் சென்ற வீடுகளெங்குமே
வளமும் இன்பமும் பெருநிறைவும்
பொங்கிப் பெருகவேண்டும்
என்பதுபோல் நிலவத் தொடங்கும் ஒரு மவுனத்தை
நப்பாசைக் கனவென்று
எண்ணவே முடியாதவாறு
அங்கே தோன்றி நின்றதே அது!

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP