Thursday, August 4, 2011

வைகறைப் புல்

1.
அழுதுஅழுது
தன் துக்கங்களையெல்லாம்
ஒரே துளியாய்த் திரட்டி நின்றதால்
உதயமாகிறது
அப் புல்லின் முன் பரிதி

2.
பரிதியின் தாகவெறி முன்
எத்தனை தன்னம்பிக்கையோடு
துளி நீட்டி நிற்கிறது அச்சிறு புல்!
எத்தனை அன்போடு வாங்கிப் பருகுகிறது
பரிதியும்!

3.
புல்லும் பெருமிதத்துடன்
நிமிர்ந்து நிற்கிறது
வானின் வைரக்கல் அன்பு
அதனைக் குளிர்வித்ததால்

4.
பரிதி உதித்தவுடன்தான் தெரிந்தது
இரவோடு இரவாக
வானம் தனக்கு வழங்கியிருந்த
அரும்பொருள் என்னவென்று
அடைந்த பேருவகையில்
அப்பொருளை அது பரிதிக்கே
கொடுத்திழந்து மேலும் களித்தது

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP