Saturday, August 6, 2011

பெண்ணும் பெருக்குமாறும்

அவன் பார்வையின் அழுக்கை உணர்ந்தபடியே
பாத்திரம் துலக்கிக்கொண்டிருந்தாள் அவள்

வக்கரித்த பார்வை வீசிக்கொண்டிருக்கும்
அவன் நெஞ்சிலேயே
திரும்பத் திரும்ப
முடிவற்ற கண்ணீருடன்
கோலமிட்டுக்கொண்டிருக்கிறாள்

திட்டமொன்றின்படியேதான் இயங்குவது போன்ற
தீர்க்கமும் தீரமும் அவள் உடலெங்கும் ஒளிரக் கண்டேன்
எப்போதும் அவளை நான் அப்படித்தான் பார்க்கிறேன்
அவளே என் அன்பும், நானே அவளுமல்லவா

அக்கறையாய்க் கைநீட்டி ஒரு பூவைப் பறித்து
அவள் சூடிக்கொண்டதன் பொருளை நான் அறிவேன்

கருப்பு வளைகள் குலுங்க
பெருக்குமாற்றைத் தட்டிச் சுருதி சேர்த்துக்கொண்டவள்
குனிந்து வளைந்து
தன் மீதும் தன் பணிகள் மீதும்
வீழ்ந்துகொண்டேயிருக்கும் வக்கிரப் பார்வைகளை
இடுப்பொடியும் வேதனையுடனும்
இயம்பவியலாத் துயருடனும்
பின்வாங்காத் தீரத்துடனும்
இடையறாது பெருக்கிக்கொண்டேயிருக்கிறாள்
(சமயங்களில் சீற்றம் கொண்டு சாத்தியமையும்
இதனுள்ளேதான் அடக்கம்)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP