Wednesday, August 29, 2012

திருட்டுமுழி திருவாளத்தான் கதை

தனது என ஒரு தோட்டம் போட்டான்
என்ன விபரீதமோ இது என
வேலி சுற்றி வந்ததொரு
கூர்கொம்புக் குட்டி ஆடு
கண்டு நடுநடுங்கித்
தொலைந்தோம் என அஞ்சினான்
இரவோடு இரவாய்
வேலியில் ஆங்காங்கே
ஓட்டைகள் வைத்து
விட்டுக் கொண்டும் விரட்டிக் கொண்டும்
தந்திரமாய்க் காலம் ஓட்டினான்.

எல்லா மேய்ப்பர்களோடும்
கைகுலுக்கும்
பெரிய மனிதனாகிக் கொண்டான்.
தன் திருட்டு விழி மறைக்க வேண்டி
எல்லோர் கண்களுக்கும்
குருட்டுக் கண்ணாடிகள் வழங்கினான்.
மந்தை விட்டுப் பிரிந்துநின்ற
ஆட்டுக்குட்டிகளை
பசி கொண்ட ஓநாய் போல்
ஓடி ஓடித் துரத்திக் கொன்றான்.

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP