Monday, September 10, 2012

காவிரியும் காணாமற்போன படித்துறைகளும்

முந்தின நாள்தான்
தன் படித்துறை ஒன்றில் இறங்கி
தன்னில் திளைத்து நீராடிச் சென்ற
அந்த மனிதனை – அவனைப் போலவே
நீயும் மெய்மறந்து
அப்படியே தன்னுள்
ஆழ்ந்து விட்டனையோ ரொம்ப நேரம்?-
இப்போதுதான் இவ்விரவில்
திடீரென்று நினைத்துக் கொண்டவளாய்
பொங்கி எழுவதென்ன, காவேரி?

நாசி விடைக்க
உன் மேனியெல்லாம்
அவன் மணம் வீச்ச் கண்டவளாய்
நீ உன் மீதே மையல் கொண்டு
படுக்கை கொள்ளாது புரள்கிறதென்ன?

சொலற்கரிய இன்பமோ?
சொன்னாற் குறைந்து போமோ?

உனது இன்பவெள்ளம்
புயல் மழை என வீசிப்
பாய்ந்து விரிந்து பெருகி
நிலவுகிறது எம் நிலமெங்கும் குளிர.

கண்மண் தெரியாத
என் காமப் பெருவெள்ளம்
வெட்கம் கொண்டு
மவுனம் சொட்டச் சொட்ட
வடிந்து கொண்டிருக்கும்
இப்போதாவது
நாணம்விட்டு
வாய்திறந்து சொல்லேன்:
யார் அவன்? என்ன விஷயம்?
(யாரிடமும் சொல்லமாட்டேன்.
என்னிடம் மட்டும் சொல்: நான்தானே?)

சொன்னால்
உன் அழகு குறைந்து விடுமென
அஞ்சுகிறாயோ?
உன் உள்ளுறைந்து நிற்கும் அவனே
ஒளிரும் நின் பேரழகின் ரகசியமோடி
கள்ளீ,
காவேரி!

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP