Sunday, September 2, 2012

குப்பைத் திரடருகே

குப்பைத் திரடருகே
கழிவுநீர்க் கால்வாய் விளிம்பின்
சிமெண்டுத் தளம்மீது
குளிரை அணைத்தபடி
துயின்று கொண்டிருந்தவன்
இன்னும் எழவில்லை,
அத்துணை அதிகாலையிலேயே
ஆர்வமான என் காலை நடை
தொடங்கிற்று.

அசுத்தத்தினதும் அருவருப்பினதும் புதல்வனான
அந்த மனிதன் யார் என்று நான்
நன்கு அறிவேன்போல் தோன்றியது.
கிடைத்தற்கரியதாய்க் கருதப்படும் பேறுகளையும் கூட
கருணைக்கு விலக்காகாதவர்களாய்
நாங்களும், இங்கிருந்தபடியே
ருசிபார்த்துத் துப்பியிருக்கிறோம்.

அந்த முகத்தை நான் பார்த்திருக்கிறேன்.
சுரணையின்மையின் தடித்தனங்களாலும்
பேராசைகளின் விகாரங்களாலும்
தன்னலவெறியின் பகட்டாலும்
வறிய மனிதர்களிடமிருந்தும்
தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கான
தந்திரங்களாலும்
அருவருப்பின் கலவைச் சித்திரமாய்ச்
சிதைவுற்றிருந்த அந்த முகத்தை.

இப் பூமியினின்றும்
இக் காலை நடையில்
கரைந்தழிவதற்கோ
சகிக்கமுடியாத கழிவிரக்கத்தில்
தொடங்கியது இத்துயரம்?

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP