Wednesday, October 17, 2012

காலி மனை

மனிதர்கள் வாழும்
வீடுகள் கட்டடங்களைக் கண்டு
ஒருபோதும் மனம் நிறைந்தவனாய்க்
காணப்படாத நீ,

கட்டி முடிக்கப்பட்ட
அக்கட்டடங்களுக்கிடையே
புதிதாய்க் கட்டப்பட்டுக் கொண்டிருக்கும்
கட்டடங்களைப்
பார்க்கும் போது மட்டும்
அவை
விரைவில் கட்டிமுடிக்கப்பட
அவாக் கொண்டனவாய்ப்
பரபரப்பெழக்
காணப்படுவதென்ன?

இப்போதிங்கே எங்கே வந்து நிற்கிறாய்?

உனது காலி மனையெனவோ
விழியெட்டும் தூரம்வரை
விரிந்து கிடக்கிறது இப் பூமி?

சொர்க்கத்தின் வரைபடச் சுருளினைக்
கையில் வைத்திருப்பவன் போல்
நாளும் நீ இங்கே
வந்து வந்து பார்த்தபடி நிற்பதென்ன?

வறுமைகளாலும் பேராசைகளாலும்
வக்கரித்துப் போன மனிதர்களிடையே
அடிமைத்தனத்தாலும் அதிகாரத்தாலும்
மழுமாறிப் போன மனிதர்களிடையே
மூட வாழ்க்கையின்
வன் கொடுமைக் கதறல்கள்
குருதி காணப் பிறாண்டும் துன்பங்களிடையே
அயராதவன்போல் அமர்ந்து
எல்லையிலாக் கணிதப் பேரறிவுடனும்
கனலும் வேட்கையுடனும்-
இசை விழையும் உயிர்க் குருத்தை
வருடி வருடி...
அல்லும் பகலுமாய்
நீ ஆராய்ந்து முடித்த வரைவுதான்
என்ன நண்பா?

அஸ்திவாரம் எங்கே?
ஆள் பலம் எங்கே? கட்டுமானச்
சரக்குகள் இன்னும் வந்து சேரவில்லையா?
வெறுமனே வந்து வந்து எத்தனை நாட்கள்
இப் பூமியினை இப்படிப்
பார்த்துக் கொண்டேயிருக்கப் போகிறாய்?
விம்மும் உன் நெஞ்சினை
நீவித் துயராற்றப்
பாய்ந்து வரும் காற்றறியுமோ
இவ் வெளியறியுமோ கதிர் அறியுமோ
எல்லாம்?

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP