துயரபாரம்
வெளி வெளியின் பிரம்மாண்டமும்
இந் நிலவெளியின் உயிர் நாடக
விந்தை உறவுகளும் இரகசியங்களும்
பெருஞ்செல்வமாய்
நம் உள் நிறைந்து ததும்பவில்லையா?
நிகழ்கள் செயல்கள் உண்மைகள்
உறவுகள் பற்றிய
நம் எண்ணங்களில்
உயிர்மையுண்டோ?
எண்ணப் பிரதிமைகளின்
பயனின்மைப் பாறாங்கன்மையை மறைக்கவோ
மலர்கள் வாசனாதிப்
பூஜைகள் பிரார்த்தனைகள் சடங்குகள்
விழாக்கள் குருக்களே?
பசியால் வாடி மடிந்து கொண்டிருப்பவனுக்கோ
ஆசைகளால் தகித்து அலைந்து கொண்டிருப்பவனுக்கோ
வழங்கப்பட்ட இசை நிகழ்ச்சி நுழைவுச் சீட்டு போலானதோ
நம் கலை இலக்கியங்களின் நுண்மாண்கதி?
என்ன செய்வதென்றொருவன் கேட்பானோ
பற்றி எரிந்துகொண்டிருக்கும்
தன் வீட்டிலிருந்து கொண்டே?
மலினமான சந்தோஷங்கள்
மலினமான துக்கங்களுக்கடியில்
கனத்துக் கிடக்கிறதோ
மெய்யான துயர பாரம்,
அன்பினூற்றை
மெய்ம்மையை
உயிரெழுச்சியை
அடைத்தபடி?