Saturday, November 24, 2012

இந்த அழகான பூமியை…

நன்றாக நிறைத்தவாறு
கட்டிவிட்டோம் நாம்
மிகப்பெரியதொரு விபச்சார விடுதியை
அல்லும் பகலும் ஓய்வின்றி
ஆடல் பாடல் சரசம் சல்லாபம் கொண்டாட்டம்
கேளிக்கைகளின் நீச்சல் குளக் கும்மாளம்
ஓர் எளிய மனிதனுக்கும்
அதுவும் வாழ்வின் ஒரு பகுதியானதால்
அதனுள் நிகழும் விழாக்களனைத்துமே
சவச் சடங்குகளாகி விட்டன வெனினும்
அன்பும் ஆனந்தமும் அங்கே
அறவே அகற்றப்பட்டு விட்டனவெனினும்
அவன் அதனுள்ளே நுழைய இயலாத துயரம்

அடிக்கடி அவனுக்குக்
கதவு அடைக்கப்படுவதை எண்ணியோ
அடிக்கடி அவனும்
அக்கதவருகே வந்து நிற்பதை எண்ணியோ
கவலைப்படுவாரில்லை

அப்பெரும் விடுதியின் ஆரோக்யமின்மை குறித்தும்
அது ஏற்படுத்தும் அழிவுகள் குறித்தும்
அதற்குள் நுழையவே விழையாத மனிதனைக் குறித்தும்
சிந்திப்பவரே இல்லை

எனினும்
சூரியனும் நிலவும் பூமியும் காற்றும்
அவ்விடுதியை வெறுத்து ஒதுக்குவதில்லை
எனினும்
அதி சுரணைமிக்க அவற்றின்
பேரொழுங்கு நடவடிக்கை என்று
ஒன்றுண்டெனவே அஞ்சுகிறேன்

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP