Friday, November 23, 2012

மேடை

திடீரென்று துண்டிக்கப்பட்டு
அமர்ந்துவிட்டது அவனது பேச்சு
(எத்தனை வருத்தத்திற்குரியது!)

அம்மேடை கவுரவத்தின் பீடமாய்க் கட்டப்பட்டிருக்கையில்
மேடை சுற்றிகளும்,
புகழையும் அதிகாரத்தையும்
நிராசையுடன் ஏறிட்டுப் பார்க்கும் வறிய முகங்களும்,
அந்தரங்கமான ஓர் உரையாடலுக்குச்
செவி பழகியிராத பரிதாப முகங்களும்,
எக்குழுவையும் அனுசரிக்காத உண்மைநிலையை
வெறுப்புடனும் பதற்றத்துடனும் பார்க்கும்
அம்மேடை மனிதர்களுமே குழுமி நிறைந்து...
அசவுகரியமான இரைச்சலாகி இருப்பதுதானே விதி
(பின்னர் பேசிய அம்மேடை மனிதர்களும்
அவன் பேச்சினைக் குதறியும்
அவன் மவுனத்தை நகையாடியும்
கெக்கலிப்பதுதானே விதி)

ஆழ்ந்த அக்கறை கவனமெனும் அன்பு
தேவைப்படுகிற
ஓர் உரையாடலை மட்டுமே விழையும் நாம்,
இசைவு தெரிவிக்குமுன்
அல்லது பேசத் தொடங்குமுன்னாவது
இம் மேடை பற்றி அறிந்திருக்க வேண்டியதுதானே
முக்கியமானது?

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP