Saturday, November 24, 2012

வரிசை மாறாமல் ஊர்ந்து செல்லும் எறும்புகள்

1.
’ஓ, கடவுளே! எத்தனை பிரகாசம் இந்த உலகம்!’
கனகாலம் மருத்துவமனைப் படுக்கையிலிருந்துவிட்டு
வெளியே வந்து
விக்கித்து நின்ற வேளை நான் சொன்னது அது
நண்பர்கள் புன்னகைத்தார்கள்
வீதியில் போவோர் வருவோர் மற்றும்
இப் பூமியெங்கும் உறைவோர்
எவரிடமும் அந்த மகிழ்ச்சியைக் காணமுடியாது
வருந்தினேன்

2.
அப்பா,
எதற்கெடுத்தாலும்
’பெரிய இவன் மாதிரி’ பேசுகிறாய் என்று
நீங்கள் காதைத் திருகி வலிக்கும்போதெல்லாம்,
பெரிய இவன் மாதிரியானவர்கள் தவிர
உங்கள் அனுபவத்தில்
பெரிய இவன் மாதிரியானவர்கள் தவிர
உங்கள் அனுபவத்தில்
’பெரிய இவன்’ ஒருவரையும் நீங்கள்
பார்த்திருக்கவில்லை என்ற உண்மைதான்
என்னை அழவைத்தது

3.
கோயிலைச் சுற்றி உலகமே கூடியிருந்த
ஒரு கொண்டாட்ட தினத்தில்
இரத்தம் சொட்ட வானிலிருந்து
விழுந்தது ஒரு பறவை.
நீதி வெறிகொண்டு ஓடிவந்தவன்
வலி தாங்கியபடி முட்டி நின்றான்
கருவறையில் ஒரு வெற்று நாற்காலியைக் கண்டு
பின்னும் தணியாத-வேக வெறியில்
அவன் அங்குபோய் அமர்ந்தான்
வேறு ஒரு வழியும் காணாததால்
நான் ஒருவனே வழி, ஒரே வழி என்றபடி
எவர் ஒருவராலும் நிரம்பாதபடி
வெறுமை தாங்கி
ஒவ்வொருவருக்குமாய்க் காத்திருந்தது
அந்த நாற்காலி

4.
எந்த ஒரு தீவிரம்
விளையாட மனமற்றவனாய்
அவனை அடித்து நிறுத்தியது?
இன்னதென்றறியாத வியாகூலத்தால்
தனித்துப் போய்
பாய் விரிக்காத வெறுந்தரையில்
கண்ணிமைக்காது படுத்திருந்தான்,
(அன்று பள்ளிக்கூடம் இல்லையோ,
அவன்தான் போகவில்லையோ)
வரிசை மாறாமல் ஊர்ந்துசெல்லும்
எறும்புகளைப் பார்த்தபடி
தன் கண்ணீரை வெளிக்காட்டாது
சிறு உணவுத் துண்டுகளையும் இனிப்பையும்
அவற்றிற்கு வழங்கி
அவை மொய்த்துத் தின்பதையும் இழுத்தபடி செல்வதையும்
பார்த்தபடி இருந்தான்
மகிழ்ச்சியோ துக்கமோ அற்ற
ஒரு விளையாட்டாகத்தானிருந்தது அதுவும்
பல காலம் உடன் வாழ்ந்து
அவர்களை நன்கறிந்தவன்போல்
பெருமூச்செறிந்தான்
ஒரு பிரமாண்ட உருவத்தோடு அங்கிருந்தபடி
அவர்களோடு அவன் விளையாடியதையும்
இமைக்காமல் அவர்களைப் பார்த்துக்கொண்டேயிருந்ததையும்
அவர்கள் அறியாதவரோ?
காலம்காலமாய் ஒரு மாற்றமுமில்லாமல்
ஒருவர் பின்புறத்தை ஒருவர் முகர்ந்தபடி
வரிசை குலையாமல்
அவர்கள் சென்றுகொண்டிருப்பதைக் காணக்
கண்ணீர் பொங்கிக் கொண்டுவந்தது அவனுக்கு

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP