Monday, November 26, 2012

சொற்களும் நம் பசிகளும்

இறந்து கிடக்கும் பெண்ணின் மார்பில்
எவ்வளவு நேரம் பால் சுரக்கும்?
மடிந்து போன பிணத்தின் மவுனம்
எவ்வளவு காலம் வழிகாட்டிக்கொண்டிருக்கும்?

பிணங்களைத் தூக்கிப் புதைப்பதற்கு
யார் சொல்லித் தர வேண்டும்?
பிணத்தைப் பிணமென்று காண்பதற்கு
தேவைப்படுவதுதான் என்ன?

தெரிய வேண்டியவை தெரிகையில்தான்
நடக்க வேண்டியவை நடக்கின்றன.
நடக்க வேண்டியவை நடக்கும் போதுதான்
நம் பசிகள் தணிகின்றன

பசியுள்ள நமக்கு வேண்டியது உணவு.
சொற்களல்ல; சொற்களெனில்
வெற்றாரவார முழக்கங்களாக அன்றி
இருக்க வேண்டும் அவை:
மரணத்தையும் உயிர்ப்பிக்கக்கூடிய
குழந்தைமை வேகம் மற்றும்
நுண்பெருக்கிக் கருவிகளாய்!
அல்லது தரிசனங்களாய்!

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP