Tuesday, November 27, 2012

மாற்றப்படாத உலகம்

தாமதத்தின் காரணங்களைச் சிந்தித்தபடிக்
கனன்று கொண்டிருந்தது அந்த மாலை,
கல்யாணமாகி வருடங்கள் சில கழிந்தும்
குழந்தை உருவாகாத்தெண்ணிக் குமைந்த துயர் நடுவே

குற்றவுணர்ச்சியால்
கனன்று கொண்டிருந்தது அந்த மாலை,
இந்த உலகைச் சரி செய்வதற்குள்
காத்திருக்கப் பொறுமையின்றி
குழந்தைகளைப் பெற்றுப்
பரிதவிக்க விட்டுவிட்டோமே என்று

துயரம் அகன்று
இன்மை கனன்றுகொண்டிருந்தது அந்த மாலை,
’உங்களுக்காக
இவ்வுலகைச் சரி செய்வதற்காகவே
நான் பிறந்துள்ளேன்’ என்பதுபோல் சிரித்த
ஒரு குழந்தை உதித்ததைப் பார்க்கச்சென்ற இடத்தில்

மீண்டும்
தாமதத்தின் காரணங்களைச் சிந்தித்தபடிக்
கனன்று கொண்டிருந்தது அந்த மாலை,
கண் முன்னே குழந்தைகள் வளர்ந்து
தங்கள் பெற்றோர்களைப் போலவே
உருமாறிக்கொண்டிருந்த நிதர்சனத்தைக்
கண்ணீர்மல்கக் கண்ணுற்றபடி

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP