Friday, November 23, 2012

அறிமுகம்

விழிகள் விரிய இப் புவியைக் கண்ட
அந்தக் குழந்தைக்கு
ஓர் அய்யம் தோன்றியது:
தன் கண்வழி தான் காணும் காட்சிகள்தாம்
பிற மனிதர்களாலும் காணப்படுகிறதா?
இத் தேடல்தானோ வாசிப்புலகிற்குள்
ஒரு நீண்டபயணம் போகத் தூண்டியது?
அங்கே அது கண்ட ஓர் அருமைதானோ
அதனைத் தற்கொலையினின்றும் காத்தது?
நிகழ்வொன்றைக் கண்ட இருவர் கண்கள்
ஒருவரையொருவர் பார்த்தும் புன்னகைத்தும் கொண்டதில்
அதன் தேடல் நின்றது

கலைகளால் அது ஆகர்ஸிக்கப்பட்டது
முடிவற்ற ஒரு கடற்கரை நடையில் ஒரு நாள்
கடல் தன் அழகுப் பொருள்கள் சிலவற்றை மாதிரியாய்
அதன் கால்களில் இடறும்படியும்
கண்களில் படும்படியும் அதனிடம் வீசியது
தான் ஒருக்காலும் புனைவுகளில் ஈடுபடும்
கலைஞனாகப் போவதில்லை எனும் ஒரு தீர்மானம்
தலைதாழ்த்தி மண்டியிட்டு அங்கே நிறைவேறியது

உன்னதக் கலைஞர்களை அது இனம் கண்டது
ஞானிகளுக்கு அடுத்தபடியாக
அவர்கள்மீதே அது ஆர்வம் கொண்டது
அவர்களது அருமை அதன் துக்கமாயிற்று
அன்னவர் நீங்கலான எண்ணற்ற கலைஞர்களின்
இரைச்சல்களுக்கு நடுவே அது வாழ்ந்தது

அது மனிதர்களோடு உரையாட விரும்பியது
உரையாடியது
கவிதை என்றும் கவிஞன் என்றும் அழைக்கப்பட்டது
கவிஞன் ஒரு நாளும் கலைஞன் அல்லன் என்பதை
அது உரத்துக் கூறியது. எச்சரித்தது.

குழந்தைமையும் மேதைமையும்
இணைபிரியா இரட்டையர்கள் எனக் கண்டது
மரணத்திடமிருந்து மவுனத்தையும்
வாழ்விடமிருந்து சிறு குரலையும் பெற்று
தன் சுரணையுணர்வையும் பரவசப் பாட்டையும்
மொழிவழி பொழிந்தது
பேரறிவையும் பெருங்கருணையையும்
ஒரு பார்வையாய் ஈந்தது
ஈடு இணையற்றதோர் தொழிலில்
ஈடுபடுவதுபோல் செயல்பட்டது
அதன் செயல் கவிதையாகவும்
செயலின்மையே
மாபெரும் கலையான வாழ்வாகவும்
சுடர்ந்தது

அது தன் இறுதியாகக் கூறியது:

கடவுளுக்கு எதிரான முயற்சியில்
ஒருகணமும் சோர்வுகொள்ளாது,
வரும் குழந்தைகளுக்கெல்லாம் பூணூலை
மாட்டிக்கொண்டேயிருக்கிற மனிதன்,
காடுகள் அழிந்துவிட்டன என்றும்
மனித உறவுகள் நசிந்துவிட்டன என்றும்
சூழல் மாசுபட்டு
போரும் வறுமையும் பெருகிவிட்டன என்றும்
கவலைப்படுவதில்லை உண்மையில்

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP