Friday, November 9, 2012

ஒளி

தன் ஒவ்வொரு அணு இலையும் பளபளக்க
ஒளியின் பாலாபிஷேகத்தை அனுபவித்தபடி
தன் எல்லாக் கைகளையும் நீட்டி அசைத்து
கிறங்கி பரவசித்துக் கொண்டிருந்தது
புதுக் குழியில்
ஒரு குழந்தை உயரம்
வளர்ந்திருந்த அந்தச் செடி

பொருள்களைத் துலங்கச் செய்யும் இந்த ஒளியே
உயிர்க்குள் புகுந்து அதனைப் பேணுகிறதும்
மூளைக்குள் புகுந்து அறிவாகச் செயல்படும் இந்த ஒளியே
மூளையின் செயல்பாட்டை முற்றுமாய் அணைப்பதும்
ஞானத்தின் வடிவாக எங்கும் விரிந்து நிற்கும் இந்த ஒளியே
அரிதான பார்வையை நல்குவதும்

ஒளியின் பாலாபிஷேகத்தில்
அனைத்து உயிர்களும் திளைத்து மகிழ்கையில்
தன் மகனைப் பற்றிய
ஒரே மனக்குறையை உடைய தாயாக
பார்வையற்ற மனிதனின்
விழிகளை வருடி அழுகிறது ஒளி

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP