Monday, December 10, 2012

ஒரு வண்ணத்துப்பூச்சியின் வாழ்க்கை

அது தன் நாட்களை
ஒருபோதும் சோம்பலில் கழித்ததில்லை
ஒரு நாளைக்கூட பொழுதுபோக்கு போன்ற
புலன் துய்த்தல்களில் செலவிட்டதில்லை
பொருள் புகழ் அதிகாரங்களை நோக்கிய
வேட்கை உந்தல்களை அது அறியாது
எப்போதாவது தன் துணையுடன்
அன்றி எப்போதும் தன் தன்மையையே
அது பாதுகாத்தபடி அலைந்த்து
அதன் உயிர்ப்பும் சிறகடிப்பும்
இயற்கையின் மர்மங்கனைத்தையும் உணர்ந்த வியப்பும்
அதை விளக்க இயலாத படபடப்புமேயாம்

ஒரு நாள் என் தோட்டத்தின் ஈரத்தரையில்
உதிர்ந்த ஒரு மலர்போல் அது கிடந்தது
நல்லடக்கம் செய்யும் சுற்றமோ
மறைவுக்குக் கண்கலங்கும் உறவுகளோ
சமூகமோ தேசமோ இன்றி
அது அனாதையாய் மரித்திருந்தது
நெஞ்சுருகும் பார்வையின் முத்தம்
ஒரு கவிதை –
இவைதானோ அதன் மொத்த வாழ்க்கையின்
மர்மமான இலட்சியம்?
இன்று அது நிறைவேறியதையோ
எளிய உயிர்கள் நூறுகள் கூடி
ஊர்வலமாய் அதை எடுத்துச் செல்ல முயல்வதையோ
கண்களில்லாத கால்கள்
அதை மிதித்தபடி செல்வதையோ
ஒரு பெருக்குமாறு அதை குப்பைகளோடு குப்பையாய்
ஒரு மூலைக்கு ஒதுக்கிவிடுவதையோ
எதைப்பற்றிய கவலையுமில்லாமல்
எல்லாவற்றையும் அதுவே ஒதுக்கிவிட்டதாய்
ஈரமான என் தோட்ட நிலத்தில்
மரித்துக் கிடந்தது அது

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP