Saturday, December 15, 2012

அது நிராதரவாய் எரிந்தபடி நின்றது

ஒருபோதும் அதனை மனிதர் கண்டுகொள்வதில்லை
காணும் தேவை ஏற்பட்டு விரும்பியதுமில்லை
தம் அற்ப ஆயுளின் அற்பத் தேவைகள்
அதன் ஆயுள்முன் ஒரு பொருட்டானதில்லையாதலால்
பதிலுக்குத் தாமும்
அதை ஒரு பொருட்டாக்காது மறுதலித்தனர்போலும்
எனினும் அவ்வப்போது அதன் பிரசன்னம் கண்டு
அஞ்சி மண்டியிட்டு ஆராதனைகள் செய்து
வேண்டுதல்களில் ஈடுபடுவதைத்
தம் அனுஷ்டானங்களாக்கிக் கொண்டு
மீண்டும் அதை நிராதரவாகவே விட்டுவிட்டனர்

மனிதர்களால் ஆகவேண்டியது அதற்கு ஒன்றுமில்லை
அதனையே ஒரு ஆசையாக நாம் உருவகித்தாலன்றி
எந்த ஒரு ஆசையும் அதன் இயல்பு அல்ல
அதன் வலிமை ஈடு இணையற்றது எனினும்
அதீத நொய்மை மற்றும் பேரறிவின் தாளாத் துயரால்
அவனை நோக்கிக் கதறியபடி நின்றது அது.
ஒரே சமயத்தில் அது அவனுக்கு மிக அண்மையிலும்
அவனைவிட்டு அவன் தொடமுடியாத தூரத்திலும் இருந்தது.
மனிதர்கள் அதற்கு ஒரு பொருட்டேயில்லாத அதன் தூரம்
அவன் கைபற்றி மண்டியிட்டுக் கதறிக்கொண்டிருக்கும் அண்மை

அவன் அதைக் கண்டு கொள்வதேயில்லை
எனினும் அவனுடைய அறிவாய் அவனிடம் புகுந்து உதவியது அது
அவனைப் பெருஞ் செல்வந்தனாக்கிய கையோடே
துயர் மிகுந்து அவனிடம் கைநீட்டி இறைஞ்சி நின்றது
தன் அழகுகளாலும் அதனால் அவனைக் கவர இயலவில்லை
என்றாலும் ஒருக்காலும் மோகபங்கடைந்து அது சோர்ந்ததில்லை
அதனுடைய ஆசையே
அதனைத் தீராப் பெருந்துயருக்குள்ளாக்கித் துன்புறுத்தியது
அதேசமயம் அது அனைத்தையும் விட்டுத் தூரே போய்
விச்ராந்தியாயிருக்கும் பான்மையையும் பெற்றிருந்ததால் பிழைத்தது

மனிதர் அதனைக் கண்டுகொள்ளாததால்
அது நிராதரவாய் எரிந்தபடி நின்றது
அதைக் கண்டவர் நெஞ்சத்தை உத்தேசித்து அவருக்காக
அது அனைத்துடனும் கூடிக் கும்மாளமிட்டபடி
தன் ஆனந்தத்தை வெளிப்படுத்தியது
மனிதர் அதனையும் கண்டுகொள்ளாததால்
மீண்டும் மீண்டும் அது நிராதரவாய் எரிந்து நின்றது

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP