Sunday, December 9, 2012

செவிமடுத்தல்

நான் ஓடோடியும் வந்துன்னைச் சந்தித்தேன்
(உண்மையிலேயே நீ என்னைச்
சந்திக்க விழைந்தாயோ அல்லது
அவ்வாறு பிறர்முன் பாவனை செய்தாயோ?)

’என்னை நீ புரிந்திருந்தால்
உன் வாழ்வு இத்தகைய
கந்தல்களாய் ஆகியிருக்காது’ எனத் தோன்றும்
ஓர் எண்ணத்தினைத்
தவிர்க்க இயலாது
அவதானிக்கிறேன்

யாரோ நான்?

எத்தனை முறை கையும்களவுமாய்ப் பிடித்துன்னிடம்
கேள்விகள் கேட்டிருக்கிறேன் நான்?

கேள்விகளுக்குச் செவிமடுத்தல் என்பதே
சந்திப்பு ஆகும்.
நீ ஒரு கேள்வி ஆனபோதே
நான் உன்னைச் சந்தித்தேன்.
என்னை ஒரு கேள்வியாகக் கொண்டிலை நீ

உன் பதிலுக்காக
நான் எவ்வளவு காலம்
கேள்விகள் கேள்விகளாய்க்
காத்துக்கொண்டிருப்பேன்?

இது ஒரு மனிதனின் கேள்வி அல்ல;
காலமற்றுப் பரந்து விரிந்தெங்கும்
சதா ஒளிர்ந்தபடி நிற்கும்
பரிவின் கேள்வி. ஆகவே
நிரந்தரமான வெறுமையின் பரிவு

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP