Friday, December 28, 2012

அந்நாள்வரை அவ்விடத்தில்

அந்நாள்வரை அவ்விடத்தில்
யாரும் பார்த்திராத அதனைப்
பார்க்க நேர்ந்ததில் அதிர்ந்தேன்
எங்கு நான் இதற்கு முன்அதனைப் பார்த்தேன்?
ஆருயிராய் என் உயிரின் உயிராய் நிலவும்
இவ்வுறவை நான் எங்ஙனம்
அறியாதிருந்தேன் இதுவரை?

இன்று அதனைக் காண நேர்ந்த
என் ஆனந்தம் குறைவுபடக்
காண்பான் என்னைக் கொல்கிறது
அதன் கண்களின் மிரட்சி,
களைப்புற்றுச் சோர்ந்த அதன் தோற்றம்
என்னுயிர் அறிகிறது
அது தன் உடம்பெங்கும் ஏற்ற காயங்களை
அதன் வலியை, அதன் தனிமையை

எச்சரிக்கை படபடக்கும் இதயத்தோடு
என் குட்டி மாணவர்களை அணைத்தபடி
அதனை அவர்களுக்குச் சுட்டுகிறேன் கிசுகிசுக்கிறேன்
எங்கள் இதயங்களில் கசியும் நீர் ஒன்றே
அதன் தாகம் தணித்து உயிர் காக்கும் ஒரே மருந்தென்ற
மர்மம் அறிந்தாற்போல பம்மியவர்கள் போலும்
அப் பம்மலையும் சந்தேகித்தவர்கள் போலும் நிம்மதியின்றி
அன்று நாங்கள் இருந்தோம் எங்கள் வகுப்பறையுள்
அது பறந்துபோம் வரை அதனைப் பார்த்தபடியே

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP