Sunday, December 2, 2012

வீதி

விடிந்தும் விடியாப் பொழுதொன்றில்
தெரியாமல் ஓர் அக்ரஹாரத் தெரு வழியாய்
நுழைந்து நடந்துவிட்டேன்

வெறுப்பும் அருவருப்பும் பகைக்கோபமுமாய்
துயரமும் பதற்றமும் பாசாங்குகளுமாய்க்
கொதித்த முகங்கள் கண்டு துணுக்குற்றேன்
என் தவறுக்கு நொந்து உறுதியெடுத்தேன்

ஆனால் அதில் பயனில்லை
இன்று தவிர்க்க முடியாததாகிவிட்டது அவ்வீதி
மேலும் எல்லா வீதிகளிலும்
அதற்கிணையானதும் அது தொடர்பானதுமான
கொந்தளிப்பை உணர்ந்தேன்

தோணித் துடுப்போ?
பெரு மழையோ?
கம்பீர நீள நெடுங்கழிப் பெருக்குமாறோ?
குனிந்து கூர்ந்து கறைகள் துடைக்கும்
துடைப்பானோ?
தூரிகையோ?
வாளோ?
என்றெலாம்
சித்தரிக்கச் சித்தரிக்கத்
தீராத உன்னைக்
காதல் மிகு உறுதியுடன் கைப்பிடித்தேன்

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP