Friday, December 7, 2012

அசல் சுவை

பல்லினதும் நாவினதும்
வேகங்களைப் பொறுத்தும்
பழத்தின் ருசி மாறுபடுகிறது.
(பல் பட்டதும்
’அது’ பயந்து ஓடியிருக்கவும் கூடும்)

மிக்ஸி பிளேடால் பழம் கூழாக்கப்படுகையில்
புதிதான சேர்மானம் ஒன்று சேர்ந்துவிடுகிறது.
(இருக்கும் ஏதாவதொன்று போய்விட்டிருக்கவும் கூடும்.
’அது’ மட்டும் போகாமலிருந்தால் போதும்)

அப் பழத்தினைக் கைக்கொண்டவரது
உயிர்ச் சூட்டினாலும்
அவர் மனத்தினாலும் கூடி
அப்பழத்தின் அவ்வேளைச் சுவை சமைகிறது
அப்பழச் சாற்றைப் பருகுபவராலும்
அதில் ஒரு வேதியியல் செயல்பாடு நடக்கிறது.
கொடுப்பவர் பெறுபவர் இருவர்க்குமிடையுள்ள உறவாலும்
உட்செயல் புரியும் உயர் அதிநுண்பொருள் அது

பழத்தின் அசல் சுவையை
வெகுசிலரே அறிகின்றனர்
அதனை அருந்தியவர்கள்
ஒருநாளும் மரிப்பதில்லை

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP