Sunday, December 23, 2012

அவன் உணர்வுகள்...

அவன் உணர்வுகள் தீவிரமாகிவிடுகின்றன,
மக்கள் கூட்டம் நடுவேயும்
தன்னந் தனியே இருந்து
எல்லாவற்றையும் யோசிக்கும் இவ்வேளையிலும்

சிலுவை சுமப்பது போலும்
சவுக்கடிகள் போலும்
கல்லடிகளின் திடீர்த்திடீர்த் தாக்குதல்கள் போலும்
நிகழ்ந்த வலிகளின் நீங்காத நிழல்.
அவனைச் சுற்றிப்
பாறைகளும் முட்செடிகளுமாய் நிறைந்த
அனல் வீசும் தரிசு,
அபூர்வமாகவே நீரூற்றுக்கள்
அதனருகில் ஒளிரும் காட்டு மலர்கள்.
அவன் தன் சிலுவைச் சுமையை நட்டு
தன்னைத் தானே அறைந்துகொள்கிறான்
காறி உமிழ்ந்துகொள்கிறான், துடித்து மரிக்கிறான்;
ஒளிமலர்ப் புல்வெளி மகரந்த மணமும்
குழந்தைக் குதூகலமுமான
ஓர் உலகில் உயிர்த்தெழுகிறான்

எனினும் அவ்வப்போது அவன் உணர்வுகள்
தீவிரமாகி விடுகின்றன
மக்கள் கூட்டம் நடுவேயும்
தன்னந் தனியே இருந்து
எல்லாவற்றையும் யோசிக்கும் இவ்வேளையிலும்

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP