Saturday, December 15, 2012

சொல்ல விரும்பியவை

மிதமிஞ்சிய நஷ்டங்களின் துக்க முடிவு
மீத் துயர்க் காயங்களின் முடிவின்பம்
போதுமானவை தந்த அமைதி
இவற்றில் எது ஒன்றுமில்லை அது

இந்த இருள் சூழ்வதற்குச் சற்றுமுன்தான்
மடி ததும்ப இங்கே பரவியிருந்தது
நெஞ்சைக் குளிர்விக்கும் அந்த ஒளி
அதைத்தான்
ஒவ்வொன்றிலும் அமர்ந்துகொண்டு
என்னை ரொம்பத் தெரிந்ததுவாய்க்
கண் சிமிட்டும் அதையேதான்-
எத்துணை ஆவலுடன் தான் சொல்ல விரும்பினேன்!

கீழே போய்க் காகிதமும் பேனாவும்
எடுத்து வந்து அமர்வதற்குள்
மளமளவென்று வேகமாய்க் கவிந்துவிட்டது
இந்த இருள்,
முற்றும் புரிபடாத முதல் உறவு.
ஒரு கணமும் எனைவிட்டுப்
பிரிய மனமில்லாத உடன்பிறப்பு.
அதையும்தான் சொல்ல விரும்புகிறேன்

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP