Saturday, December 29, 2012

ஒரு கணக்கு

வாருங்கள் நண்பர்களே
இன்று உங்களுக்கோர் கணக்குப்பாடம்
சொல்ல எனக்கு அனுமதியுங்கள்

உலகின் மககள்தொகையை
ஒரு பத்து பேராகக்கொண்டு
சராசரி மனதத் தரத்திற்கு
ஒரு 20% மதிப்பெண்களே கொடுக்கிறேன்
சரிதானா?
நம் வேதனைகளுக்குக் காரணமான
இந்த ஈனச் சிறு உலகை
நீங்களும் அறிந்தவர்தாமே!

என் உத்தம நண்பர்களான
உங்கள் இருவருக்கும் தலைக்கு
95, 95 விழுக்காடுகள் சமமாகக் கொடுக்கிறேன்
உற்றுக் கவனிக்க வேண்டும் நீங்கள் இக் கணக்கை

மொத்த உலகின் தரம் உயர
இந்த 20 விழுக்காட்டிலும்
உங்கள் பங்கு மகத்தானது
அதற்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்
என்றாலும்
80 விழுக்காட்டு இழிமையிலும்
உங்கள் பங்கு 5, 5 விழுக்காடுகளே
உள்ளதை நீங்கள் உணரவேண்டும்
அவ்வப்போது இந்த 5, 5 விழுக்காடுகள்
80 விழுக்காட்டுப் பாவங்களுக்கும்
வித்தாகவோ துளி விஷமாகவோ நெருப்புக் குஞ்சாகவோ
நேர்ந்துவிடுவதையும் நீங்கள் அறிய வேண்டும்
இதுவே என் விண்ணப்பம்

சீரழிந்த இந்த உலகின் சீரழிவில்
உங்கள் பங்கும் உண்டு என்பதை
நீங்கள் மறுக்க முடியாதல்லவா?
மேலும் நீங்கள்
உங்கள் நண்பர்களுக்கும் சொல்லுங்கள்
நீங்கள் உங்களிட்த்துக் கூட்டும்
ஒவ்வொரு மதிப்பெண்ணும்தான்
இந்த உலகின் சராசரி மனிதத் தரத்தை
உயர்த்துகிறது என்பதை

இந்த உலகத்தின் பாவத்தில்
நம் பங்கும் இருக்கும்வரை
நிம்மதிதான் உண்டோ, சொல்லுங்கள்

இப்போது கணக்கின் இறுதிக் கட்டத்திற்கு
வந்துவிட்டோம்.
கவனமாகக் கேட்க வேண்டுகிறேன்:
இந்த உலகியல்
துல்லியமானதும் கறாரானதுமான
ஒரு கணக்குப் பாடம் ஆகும்.
இங்க 100% எடுக்காதவர் அனைவருமே
தோற்றவர்களே - பாவிகளே
இத்தனைக்கும் மேலே
நூறு விழுக்காடு என்பது
நாம் அடைய முடியாத இலட்சியமுமல்ல.
சாத்தியமானதும் எளிமையானதும்
மனிதன் தவிர்க்கக் கூடாததுமான
ஒரு நிலை நிற்றல் என்பதையும்
அழுத்தம் திருத்தமாக
அடிக்கோடிட்டுக் கூறுகிறேன் இங்கே.
நம் மூக்குத் துவாரத்திற்குள்ளும்
புகுந்து நிற்கும் வானத்தை
எட்டாத உயரத்திலிருக்கிறதாய்
எப்படிச் சொல்வோம்?
மட்டுமின்றி
நூறு விழுக்காடு மதிப்பென் பெற்றும்
வேதனிக்கும் ஓர் உள்ளத்திற்கு மட்டுமே
குற்றவுணர்ச்சி இருக்காது
(பிரக்ஞையற்றவர்க்கும் அது இருக்காது
என்பது வேறு விஷயம்)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP